ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணி! 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

Published On:

| By Mathi

ICC World up India SA Champion

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது. நவம்பர் 2, அன்று நடந்த இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி தங்கள் முதல் உலகக் கோப்பைப் பட்டத்தை வென்று, கோடான கோடி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

மழை காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ADVERTISEMENT

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 104 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

ADVERTISEMENT

தொடர்ந்து விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் அவர் குவித்த ரன்கள் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜ் குவித்த 409 ரன்கள்தான் சாதனையாக இருந்தது; தற்போது ஸ்மிருதி மந்தனா, 434 ரன்கள் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

செமிஃபைனலில் சதம் அடித்த ஜெமிமா ரோட்ரிகஸ் 24 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்களும் எடுத்தனர்.

ADVERTISEMENT

மறுபுறம், தீப்தி ஷர்மா 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 3 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ரிக்சா கோஷ், 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்து, இந்திய அணியின் ஸ்கோரை 300-ஐ நெருங்க உதவியாக இருந்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டிருந்தது இந்திய அணி.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணியால் மொத்தம் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி கோப்பையை வென்று சாம்பியனாக மகுடம் சூடி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share