பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஐந்து ஆட்டங்களை நவி மும்பைக்கு மாற்றியுள்ளதாக ஐசிசி இன்று (ஆகஸ்ட் 22) அறிவித்தது.
கடந்த ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி முதன்முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக ஜூன் 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 அப்பாவி ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 48 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இந்திய கிரிக்கெட்டில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சின்னசாமி மைதானத்தில் மிகப்பெரிய போட்டிகள் நடத்துவதற்கு தகுதி இல்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியது.
இதற்கிடையே செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை மகளிர் உலகக்கோப்பை தொடரின் சில போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தது.
ஆனால் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து போட்டியை நடத்த கர்நாடக மாநில அரசிடமிருந்து கர்நாடக மாநில சங்கம் விளையாட்டுகளை அனுமதி பெறத் தவறியது.
இதனையடுத்து பெங்களூரில் நடைபெற இருந்த போட்டிகளை மற்ற மைதானங்களுக்கு மாற்றி திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

செப்டம்பர் 30 ஆம் தேதி தொடரை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடக்க ஆட்டம் பெங்களூருவில் நடைபெறவிருந்தது. ஆனால் தற்போது குவஹாத்தியில் உள்ள ACA மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறவிருந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் குவஹாத்திக்கு மாற்றப்பட்டுள்ளது. போட்டியின் முந்தைய இரண்டு ஆட்டங்கள் குவஹாத்திக்கு மாற்றப்பட்டதன் விளைவாக, அக்டோபர் 20 ஆம் தேதி இலங்கை vs பங்களாதேஷ் மற்றும் அக்டோபர் 23 ஆம் தேதி இந்தியா vs நியூசிலாந்து அணிகள் நவி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் இடம் பிடிக்கும் அணி நான்காவது இடம் பிடிக்கும் அணியுடனும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும் அணியுடனும் மோதும்.
நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் மூன்று லீக் போட்டிகள், ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் அது கொழும்புவிற்கு மாற்றப்படும்.
