அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த நிலையில் நேற்றிரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவில் இருந்து அசவுகரியமாக உணர்ந்துள்ளார். வயிறுவலி, ஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் இருந்ததால் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை, மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்குரத்த பரிசோதனை, ஈசிஜி, எக்கோ, ஸ்கேன் போன்ற முக்கிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தினங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் ஐ.பெரியசாமி அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று மீனாட்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
