நானே தலைவர்… பொதுக்குழு தேர்ந்தெடுத்தது என்னைதான்! அப்பாவுக்கு அன்புமணி பதில்!

Published On:

| By Aara

பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று டாக்டர் அன்புமணி இன்று (ஏப்ரல் 12) அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி காலை தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘பாமகவின் நிறுவனரான நானே இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி இனி செயல் தலைவராக செயல்படுவார்’ என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பாமகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸின் மகள்கள், கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தொடர்ந்து ராமதாஸிடம் சமரசம் பேசினார்கள். ஆனாலும் நான் எடுத்த முடிவு உறுதியானது என்று அவர் கூறிவிட்டார்.

மின்னம்பலம் ஏப்ரல் 11 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் ராமதாஸ்- அன்புமணி… அடுத்த கட்ட மோதல்! பாமக பொதுக்குழுவை கூட்டப் போவது யார்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு பற்றி, அன்புமணி நடத்திய ஆலோசனையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி தலைவருக்கு தான் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த தலைவர் பதவியை மாற்றுவதற்கு நிர்வாக குழு, பொதுக்குழு முடிவெடுக்க வேண்டும். ஆனால் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்படி ஒரு முடிவை அறிவிப்பது கட்சிக்கு நல்லதல்ல, விதிப்படி சரியும் அல்ல. இதை எதிர்த்து நாம் கருத்து தெரிவிக்க வேண்டும். கட்சியின் எதிர்காலம்தான் இனி முக்கியம். பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நீங்க கூட்டுவதாக அறிவியுங்கள்’ என்று சில நிர்வாகிகள் அன்புமணியிடம் கூற… இப்போது எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்களிடம் வற்புறுத்தியுள்ளார் அன்புமணி” என்று தெரிவித்திருந்தோம்.

அந்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் ஜி.கே.மணி உள்ளிட்டோரின் சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் ராமதாஸ் அறிவிப்பையடுத்து முழுதாக மூன்று நாட்கள் நிறைவடையும் நிலையில் டாக்டர் அன்புமணி இன்று (ஏப்ரல் 12) இரவு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்’ என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதில், I only pmk president … Anbumani’s announcement

“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும்.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். I only pmk president … Anbumani’s announcement

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்” என்று தெரிவித்துள்ளார் டாக்டர் அன்புமணி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share