பிரதமர் மோடியின் தமிழக பிரசார கூட்டத்தில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ந் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “2026 சட்டமன்ற தேர்தலுக்கான நிலைப்பாடு பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்கிறேன். மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. அதிமுகவில் எனது போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் எந்த ஒரு புதிய கட்சியும் தொடங்கப் போவது இல்லை என்றார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
