ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கும் என்ற மாயை மக்களிடத்தில் உள்ளது. ஆனால் எனக்கு அதிக வேலைகள் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூலை 22) எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “140 கோடி மக்கள் இருக்கும் இந்த நாடு அரசாங்கத்தால் மட்டும் உருவாக்கப்படவில்லை. அதற்கு சாத்தியமும் இல்லை. ஆனால் இது மக்களின் திறமையால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் வளர்ச்சியை நோக்கி ஓட வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்நோக்கி அழைத்துச் சென்றனர்
9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புது தொழில் முனைவோர் என்பது மிக மிக குறைவாக இருந்தது. இன்று உலகில் 3வது அதிக புதிய தொழில் முனைவோர் உள்ள நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளோம். அதற்கு காரணம் மக்கள் மீது அரசு வைத்த நம்பிக்கை தான்.
உலகளவில் இன்று இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது அனைத்திற்கும் காரணம் மக்கள் தானே தவிர அரசாங்கம் இல்லை.
தோல்வியை கண்டு யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். ஆனால் தோல்விதான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும்.
நாட்டின் வளர்ச்சி தான் எனக்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்” என்று தொழில் முனைவோர் மத்தியில் ஆளுநர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கின்றது என்று மக்களிடத்தில் ஒரு மாயை உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் இடங்களில் எல்லாம் அதிக வேலைகள் உள்ள நிலையில் வந்துள்ளீர்கள் என்று கூறுவார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் தான் நான் என்ன வேலை செய்கிறேன் என்று தெரியும். எனக்கு அதிக வேலைகள் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா