அதிமுக- பாஜக கூட்டணியில் தாமே முதல்வர் வேட்பாளர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கூறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். Edappadi Palaniswami AIADMK
சென்னையில் இன்று ஜூலை 5-ந் தேதி செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சென்னைக்கு அமித்ஷா வந்த போது, இந்தியாவில் இருக்கிற அத்தனை ஊடக நண்பர்களும் வந்திருந்தனர். அப்போது, கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாக அறிவித்தார்.
“அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது; இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். அதிமுக ஆட்சி அமையும். முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி)” என தெளிவாக சொன்னார் அமித்ஷா. அனைத்து ஊடகங்களிலும் இது பதிவானது.
இவ்வளவு தெளிவாக சொன்ன பிறகும் ஒவ்வொரு முறையும் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்களே..
அமித்ஷா இப்படி கூறிய பின்னர், யார் இதற்கு மாறாக பேசினாலும் அது சரியல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
