சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 21) ஐபிஎல் போட்டியின் 29 ஆவது லீக் ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி” கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கிறேன்” என்று கூறியது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வழக்கமாக பரிசளிப்பு விழாவில் கேள்விகள் கேட்கும் ஹர்ஷா போக்லே தான் இந்த முறையும் தோனியிடம் கேள்விகளை கேட்டார்.
மேட்ச் முடிஞ்சதுக்கு அப்புறமும் உங்கள பார்க்குறதுக்குதான் இவ்ளோ கூட்டமும் வெயிட் பண்றாங்க’ என தோனியை வரவேற்றார் ஹர்ஷா. ‘எனக்கெல்லாம் பெஸ்ட் கேட்ச் அவார்ட் கொடுக்கமாட்டீங்கல?’ என செல்லமாக கோபித்துக் கொண்டே பேசத்தொடங்கிய தோனி,
“என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கின்றேன். இதனால் ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.சென்னை ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள். போட்டி முடிந்தாலும் நான் என்ன பேசுவேன் என்று கேட்பதற்காகவே மைதானத்தில் காத்திருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய எம்.எஸ். தோனி,”நான் எப்போதுமே பந்துவீச்சாளர்களிடம் இப்படி பீல்டிங்கை நிறுத்துகிறேன், அதற்கு தகுந்த மாதிரி பந்து வீசுங்கள் என்று சொல்ல மாட்டேன்.சில சமயத்தில் சில பேட்ஸ்மேன் வித்தியாசமாக விளையாடினால் அப்போது மட்டுமே என்னுடைய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்குவேன். மற்றபடி எந்த இடத்தில் எந்த பில்டர்கள் வேண்டும் என்று பந்துவீச்சாளர்களை முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்குவேன். பிராவோ மட்டும் தான் பீல்டர்களை நிறுத்தும் விசயத்தில் என்னுடன் சண்டை போடுவார். மலிங்கா தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு முறையால் பிரபலமானார் அதேபோன்று பதிரானாவும் செயல்படுகிறார். அவர் பந்து வீசும் முறையை கணித்து அடிப்பது கடினமாகும்”என்றார்.

மேலும், வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், இன்று பனிப்பொழிவு இருக்காது என நினைத்தேன். இதனால் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தேன். எனினும் எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடித் தந்தார்கள். விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்பிங் செய்வதற்கு திறமை மட்டுமே இருந்தால் போதாது.
சில சமயம், சரியான இடத்தில் நாம் இருக்க வேண்டும். எப்போதுமே தயார் நிலையில் கீப்பிங் செய்ய வேண்டும். இது அனுபவம் மூலம் தான் கிடைக்கும். எனக்கும் வயது ஆகிவிட்டது. அதனை மறுக்க முடியாது என்று கூறினார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி
மு.வா.ஜெகதீஸ் குமார்
விசில் போட வைத்த CSK: நேரடியாக கண்டு களித்த முதலமைச்சர் ஸ்டாலின்
கர்நாடகா தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ் வேட்பாளர்!