”இப்போது வரும் தமிழ் படங்களின் தலைப்பால் வெட்கப்படுகிறேன்” : வைரமுத்து

Published On:

| By christopher

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரம் சார்ந்த தொழில், அதனை நம்பி வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்கள் பற்றிய திரைப்படம். படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வைரமுத்து தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

நிகழ்வில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், “நண்பர்களே மிக மாறுபட்ட ஒரு படத்தின் பாடல்கள், ஒரு படத்தில் கதைக்கூறுகள், ஒரு படத்தில் அழகியல் இவற்றோடு முடிவது தான் ஒரு திரைப்பட பாட்டு வெளியீட்டு விழாவின் சம்பிரதாயங்கள், அல்லது கண்மூடித்தனமான மரபுகள். ஆனால், அதை தாண்டி இந்த விழா சமூகம் குறித்து பேசியிருக்கிறது. மண் குறித்து பேசியிருக்கிறது, நம் மண்ணின் தாவரமான பனை குறித்து பேசியிருக்கிறது.

பனை என்பது இந்த படத்தின் பெயர் அல்ல, நம் மண்ணின் பெயர், மக்களின் பெயர், நம் கலாச்சாரத்தின் குறியீடு,
என்று தான் நான் கருதுகிறேன்.

ஒரு படத்திற்கு தலைப்பு என்பது மிக மிக அவசியம். கடந்து போவது எளிது ஆனால் கடந்து செல்லும் போதே ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது வருகிற தமிழ்ப் படங்களின் தலைப்புகளை பார்க்கும் போது நான் கொஞ்சம் துக்கப்படுகிறேன், சில நேரங்களில் வெட்கமும் படுகிறேன். அந்த பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, அது வெறும் சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம், தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம், தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம்.

நல்ல பெயர்களை, தனித்துவமான பெயர்களை ஏன் நீங்கள் சூட கூடாது என்று பார்க்கிறேன். தலைப்பு என்றால் நெஞ்சை தைக்க வேண்டாமா? என் இருதயத்துக்குள் சென்று பசைப்போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா?,
என் நா திருப்பி உச்சரிக்க வேண்டாமா?

தலைப்பு என்பது ஒரு படத்துக்கு ஒரு கருத்தை சொல்வதாகவும், இன்னொன்று ஒரு காட்சியை விரிய செய்ய வைப்பதாகவும், அது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், அமைய வேண்டும் என்ற வகையில் தான் நம் முன்னோர்கள் தலைப்பு வைத்தார்கள். பழைய தலைப்புகளை பார்த்தால், அந்த தலைப்புகளில் கதை வரும்.

’மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்’ என்றால் ஒரு சமூகத்தின் பண்பாடே வந்துவிடும். ’கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று சொன்னவுடன் ஒரு கலாச்சாரத்தின் விழிமியம் வந்துவிடுகிறது.

தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதையாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்துக்கு சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கவிஞனின் வேண்டுகோள் அல்லது ஒரு பாடலாசிரியனின் வேண்டுகோள் என்று நினைத்து விடாதீர்கள், இது தமிழ் மக்களின் வேண்டுகோள், பாமரனின் வேண்டுகோள், உழவனின் வேண்டுகோள், மூட்டை தூக்குகிற தொழிலாளியின் வேண்டுகோள், விறகு வெட்டியின் வேண்டுகோள். அவன் தமிழோடு இருக்க விரும்புகிறான், ஆனால் நீங்கள் தள்ளி நிற்கிறீர்கள்.

நான் ஒன்று கேட்கிறேன், தமிழுக்கு மாறுபட்ட மொழியில் நீங்கள் தலைப்பு வைத்து அந்த படம் வெற்றி பெறுகிறது என்றால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அந்த படம் வெற்றியும் பெறுவதில்லை என்ற போது,
ஏன் நீங்கள் அப்படி தலைப்பு வைக்கிறீர்கள்? இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்ன இயக்குநர், படத்திற்கு ‘விதை’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று சொன்னார். நான் சொன்னேன், விதை நல்ல பெயர் தான். ஆனால், நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளியிருக்கிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த துடிப்பும் தலைப்புக்குள் வர வேண்டும் என்றால் ‘பனை’ என்று பெயர் வையுங்கள், என்று சொன்னேன். அவர் உடனே ஏற்றுக்கொண்டு, ’விதையை விட பனை எனக்கு பக்கத்தில் இருக்குது ஐயா’ என்று சொன்னார்.

இந்த பனை என்ற குறியீட்டை பற்றி உங்களுக்கு சில செய்திகளை சொல்லியாக வேண்டும்.

இந்தியாவில் 11 கோடி பனைமரங்கள் இருக்கின்றன. இதில், 6 கோடி பனைமரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன. இந்த பனைமரம் என்பது தமிழ்நாட்டு தாவரம். இந்த பனை மரத்தை சாதாரணமாக கருத வேண்டாம் அது நமது முடியாட்சியோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. நமது கலாச்சாரத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிறது.

சேர, சோழ, பாண்டியர்களுக்கு மூன்று கொடி இருப்பது தெரியும். சோழனுக்கு புலிக்கொடி, பாண்டியனுக்கு மீன் கொடி, சேரனுக்கு வில் கொடி என்பது உங்களுக்கு தெரியும். இந்த மூன்று மன்னர்களுக்கும் மூன்று மாலைகள் இருந்த கதை தெரியுமா?, பாண்டியனுக்கு வேப்பம் பூ மாலை, சோழனுக்கு ஆத்திமலர் மாலை, சேரனுக்கு பனம்பூ மாலை, சேர மன்னன் தனது நெஞ்சில் அணிந்து தேசிய பூவாக கருதியது பனம்பூ மாலை, அது நம்முடைய வரலாறு. இந்த பனை மாதிரி தாய் கூட கொடுக்க முடியாது. தாய்ப்பால் கொடுத்ததற்காக தாய்க்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள், தாயும் நம்மிடம் எதிர்பார்ப்பாள், அது தவறில்லை, அவளுக்கு அந்த உரிமை இருக்கிறது.

ஆனால், பனை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் தண்ணீரை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் பராமரிப்பை எதிர்பார்ப்பதில்லை, உன்னிடம் உரத்தை எதிர்பார்ப்பதில்லை. அது வானத்தில் இருந்து நீரை வாங்கிக்கொள்கிறது, வானத்தில் தண்ணீர் குறைந்த போது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. பனைமரத்தை தமிழ்நாட்டின் தேசிய மரமாக அறிவித்த செய்தி சொல்கிறது, பனை மரம் இந்த நாட்டில் எவ்வளவு உணரப்பட்டிருக்கிறது என்று.

என் பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசிய இயக்குநர்கள் அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசுக்கு நன்றி, அவர்கள் பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு பொன்னாடை உள்ளிட்ட எதுவும் மகிழ்ச்சி தராது, கைதட்டல்கள் தான் மகிழ்ச்சியை கொடுக்கும், கலைஞனின் படைப்பை மக்கள் புரிந்துக்கொள்ளும் முறை தான் அவனுக்கான விருதுகளாக அமையும், அப்படி என் வரிகளை புரிந்து, ரசித்து அதை இங்கு நினைவு கூர்ந்ததற்காக அவர்களுக்கு நன்றி.

பாடல்களை புரிந்துக்கொள்வதற்கு கொஞ்சம் விசாலம் வேண்டும். தமிழர்கள் எல்லாம் தமிழை ரசிக்கிறார்கள் என்று தான் நான் நம்புகிறேன். நான் நம்புவதற்கு காரணமே தமிழ்நாட்டு மக்கள் பழமொழி படித்து வந்தவர்கள், விடுகதை போட்டு வந்தவர்கள், எழுத்தறிவு இல்லாதவன் கூட தமிழோடு உறவாடி வந்திருக்கிறான் தமிழ்நாட்டில். அவனை கேட்டால் விவாதிப்பான், பழமொழிகளில் பதில் சொல்வான், விடுகதைகளில் சிக்க வைப்பான், அப்படி தமிழன் வாழ்வோடு, தமிழோடு ஊறி வந்திருக்கிறான். எனவே, இந்த தமிழும் அவனுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன்.

இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என்னை வந்து பார்த்த போது, இவர்களுக்குள் ஒரு பாரதிராஜா, ஒரு ஷங்கர், ஒரு மணிரத்னம் இருக்க மாட்டார்களா, என்று தான் கருதிப்பார்க்கிறேன். அதனால் நீங்கள் எல்லோரும் வளர வேண்டும். எந்த மரமும் புயலில் சாய்ந்துவிடும், எந்த மரமும் வெயிலில் காய்ந்துவிடும். ஆனால், எந்த புயலுக்கும் சாயாத மரம், எந்த வெயிலுக்கும் காயாத மரம் பனை. அந்த பனை போல் இந்த பனை படக்குழு வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் இறுதியில் இசை குறுந்தகடை வைரமுத்து வெளியிட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

வைரமுத்து பாடலில் பிழை… விழா மேடையில் போட்டுடைத்த விக்கிரமராஜா

‘நீட்டை ஒழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை’ – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share