iமலரே மௌனமா.? இசையமைப்பாளர் வித்யாசாகர்

Published On:

| By Balaji

`மலரே மௌனமா.? மௌனமே வேதமா.?’ என்னும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் வெண்பனி தூவும் இசை வருடலாய் மனதை நனைக்கும்.வைரமுத்துவின் வரிகள் உறங்கிக் கொண்டிருந்த காதலர்களையும் எழுப்பிக் கேட்க வைக்கும். இந்த ஒற்றைப் பாடல் வழியே வித்யாசாகர் என்னிடம் அறிமுகமானார்.

பின்னர் ‘ தில்’ படத்தில் `உன் சமையலறையில்’ பாடலைக் கபிலனிடமும்,’அள்ளி தந்த வானத்தில்’ `கண்ணாலே மிய்யா மிய்யா’ பாடலை அறிவுமதியிடமும்,’தவசியில்’ `தந்தன தந்தன தைமாசம்’ பாடலைப் பா.விஜயிடமும், ‘பூவெல்லாம் உன் வாசத்தில்’ `திருமண மலர்கள் தருவாயா’ பாடலை வைரமுத்துவின் மனைவி பொன்மணியிடமும், ‘ரன்னில்’ `மின்சாரம் என்மீது பாய்கின்றது’ பாடலை விவேகாவிடமும்,’சுள்ளானில்’ `கவிதை இரவு இரவுக் கவிதை’ பாடலை யுகபாரதியிடமும்,’சந்திரமுகியில்’ `கொக்கு பற பற’ பாடலை நா.முத்துக்குமாரிடமும் எனப் பாடலாசிரியர்கள் அத்தனை பேரையும் தன் இசையில் எழுத வைத்திருப்பார்.

அதுமட்டுமல்லாது வில்லனில் `ஒரே மனம் ஒரே குணம்’,தூளில் `ஆசை ஆசை இப்பொழுது’, அன்பே சிவத்தில் `யார் யார் சிவம்’, இயற்கையில் `காதல் வந்தால் சொல்லியனுப்பு’, சதுரங்கத்தில் `விழியும் விழியும்’, மொழியில் `காற்றின் மொழி’, ராமன் தேடிய சீதையில் `மழை நின்ற பின்னும்’, காவலனில் `யாரது யாரது’ போன்ற மெல்லிசை பாடல்களைத் தந்திருப்பார்.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமல்லாது, தில்லில் `மச்சான் மீச வீச்சருவா’,தூளில் `சிங்கம் போல நடந்து வர்றான்’, மதுரயில் `மச்சான் பேரு மதுர’, ரன்னில் `காதல் பிசாசே’, சந்திரமுகியில் `தேவுடா தேவுடா’, மஜாவில் `ஐயாரெட்டு நாத்துக் கட்டு’, பரமசிவத்தில் `ஆச தோச அப்பளம் வடை’,சிறுத்தையில் `அழகா பொறந்து புட்ட’ போன்ற துள்ளலிசைப் பாடல்களையும் தந்திருப்பார்.மேலும் வில்லனில் `ஆடியில காத்தடிச்சா’, தம்பியில் `பூவனத்தில் மரமுண்டு’, அபியும் நானுமில் `வா வா என் தேவதையே’, சிறுத்தையில் `ஆராரோ ஆரிரரோ’ போன்ற தாலாட்டுப் பாடல்களையும் தந்திருப்பார்.

கடைசியாகக் கரு. பழனியப்பன் இயக்கிய `ஜன்னலோரம்’ திரைப்படத்தில் இசையமைத்துள்ளார்.அதன் பிறகு எந்த தமிழ்ப் படங்களிலும் இசையமைக்கவில்லை.இசையால் தமிழ் ரசிகர்களைத் தன் கட்டுக்குள் வைத்திருந்த வித்யாசாகர் இளம் தலைமுறைகளோடு போட்டி போடமாட்டாமல் மௌனமாய் இருக்கிறார். எப்போது மௌனம் கலைப்பாரெனத் தெரியவில்லை. மலரே மௌனமா..?�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share