பிரதமர் மோடி வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு வந்தது.
இதுவரை 5 முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாக வரும் ஜூன் 16 மற்றும் 17 தேதிகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகப் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து வரும் நிலையிலும், ஊரடங்கு மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 16ஆம் தேதி 3 மணி அளவில், பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, இமாச்சலப் பிரதேஷ், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் , அந்தமான் & நிகோபார், தாரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜூன் 17ஆம் தேதி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களான, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திர பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
முன்னதாக ஒரே நாளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆலோசனை நடைபெற உள்ளது. இதன் மூலம் 16 மற்றும் 17 ஆம் தேதிக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-கவிபிரியா**�,