தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்… எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று தெளிவாக கூறியுள்ளார்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவுக்குக் குடிநீரை பருக வேண்டும்.
செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.
அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை அவசியம் பருக வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லவும்.
குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் இருக்க வேண்டும். இவர்கள் ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி பொது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியில் செல்லும்போது காலணிகளை அணியவும். மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.
சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள். குழப்பமான மனநிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள்.
மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு 108 மூலம் உதவி செய்யவும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்படி தகவல்களை பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அன்னாசி சல்ஸா
GTvsRR : 19வது ஓவரில் ட்விஸ்ட்… கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்!
”மோடி தான் இந்தியாவின் முதல் எதிரி” : வைகோ ஆவேசம்!
குக் வித் கோமாளி 5: போட்டியாளர்கள் லிஸ்ட் கசிந்தது… அட இவங்க கூட வர்றாங்களா..?