12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகளை எப்படி எளிதாக தெரிந்துகொள்வது என இங்கு காணலாம்!
அதன்படி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம்.
www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அவர்கள் தந்த செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா