எளியோரின் திரையரங்கம் ஏ.வி.எம் ராஜேஸ்வரி மூடப்படுகிறது!

Published On:

| By Balaji

சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் முற்றிலுமாக மூடப்படுகிறது என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

1970களில் பெருமை வாய்ந்த ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக கட்டப்பட்ட திரையரங்கம் தான் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். வடபழனி சாலையில் உள்ள இந்தத் திரையரங்கம் ஏ.வி.எம் ஸ்டூடியோவின் அருகிலேயே அமைந்துள்ளது. குடும்பத்தோடு அனைவரையும் திரையரங்கு அழைத்துச் செல்ல முடியாமல் தனது பட்ஜெட் கணக்கை ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்துப் பார்க்கும் சாமானிய குடும்பத்தலைவனின் தேர்வுகளில், முக்கியமான ஒன்றாக அமைவது ஏ.வி.எம். ராஜேஸ்வரி. குறிப்பாக பல உதவி இயக்குநர்கள், தினசரி திரை ஊழியர்கள், சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து தியேட்டர்களின் டிக்கெட் விலையால் சினிமா பார்க்க முடியாமல் தவிக்கும் பல இளைஞர்களின் புகலிடம் இந்த ஏ.வி.எம். ராஜேஸ்வரி. அதற்கு காரணம் இன்றும் நியாயமான விலையில் சினிமா டிக்கெட்டுகளை வழங்கி வரும் திரையரங்குகளில் ஒன்றாக ஏ.வி.எம். ராஜேஸ்வரி இருப்பதே.

மல்டி பிளக்ஸ்கள் கோலோச்சும் காலத்திலும், கால மாற்றத்துக்கு ஏற்றபடி ஏசி, சீட்டுகள் என உட்கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது ஏ.வி.எம். ராஜேஸ்வரி. இருந்த போதும் அதைக் காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்தியதில்லை. ‘பட்ஜெட் தியேட்டர்னா ராஜேஸ்வரி தான்…’ என இன்னமும் இதற்கு ரசிகர்கள் உண்டு. அதனாலேயே இன்றுவரை, அரசு நிர்ணயித்த தொகையையே டிக்கெட் கட்டணமாக வசூலித்து வருகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி.

இந்நிலையில், ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படுவதாக செய்திகள் நேற்று(ஜூன் 11)முதல் வெளியாகத்துவங்கியது. இது தொடர்பாக தமிழ் இந்துவிடம் பேசிய ஏ.வி.எம் தரப்பு இச்செய்தி உண்மைதான் எனக் கூறியுள்ளது. மேலும், ஏ.வி.எம் தரப்பு கூறுகையில், தியேட்டரை மூட முடிவெடுத்துள்ளோம். ஏனென்றால் சில வருடங்களாக எதிர்பார்த்த கூட்டம் வரவே இல்லை. 20 முதல் 30 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தார்கள். ஒரு படம் வெளியான அன்று நல்ல கூட்டம் இருக்கும். அடுத்த நாள் கூட்டமே இருக்காது. இதனால் கையிலிருந்து பணம் போட்டு நடத்தப்பட்டு வந்தது.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகள் எப்படிச் செயல்படும் என்ற அச்சத்தால் மூடப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. மார்ச் மாதம் முதலே மூடப்படுவது உறுதியாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் தொடங்கியது. பல வருடங்களாகச் செயல்பட்டு வந்த திரையரங்கம் மூடப்பட்டது எங்களுக்கே வருத்தம்தான்” என்று தெரிவித்தார்கள்.

மேலும், ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்பட்டது தொடர்பாக ஏவிஎம் நிறுவனத்தினர் சார்பில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர். ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்படப் போகும் செய்தியால் சென்னைவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share