கவரிங் முதல் தங்கம் வரை ஆபரணங்களை அணியும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. 24 மணிநேரமும் அவற்றை அணிந்திருப்பதால் அவற்றைச் சுத்தம் செய்வதையே பலர் மறந்து விடுகின்றனர். காதுகளில் அணிந்திருக்கும் தோடுகளைக் கழற்றிப் பார்த்தாலே எந்தளவு நகைகளை சுத்தம் செய்கிறோம் என்று தெரிந்துவிடும்.
“குளிப்பதற்கும் தூங்குவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் முன் நகைகளைக் கழற்றிவிடுவது நல்லது. விரைவாக நகைகளைச் சுத்தம் செய்ய ஒரு மென்மையான துணியினால் அவற்றைத் துடைக்கலாம். முழுமையாகச் சுத்தம் செய்ய வாரத்திற்கு ஒருமுறை 10-15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான சோப்பு நீரில் நகைகளை ஊற வைக்கலாம்.
வேலைப்பாடுகள் அதிகமுள்ள சிக்கலான நகைகளுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்தி நீரில் சுத்தம் செய்து பஞ்சு இல்லாத துணியால் துடைக்கலாம். கற்கள் உள்ள நகைகளுக்குச் சிறப்பு கவனிப்பு தேவைப்படலாம். தெளிவாகத் தெரியாவிடில் அவற்றை நீரில் ஊற வைத்துக் கழுவுவதைத் தவிர்த்து விடுங்கள். ஆழமாகச் சுத்தம் செய்ய ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை புரொஃபஷனல் க்ளீனிங் செய்து கொள்ளுங்கள். நகைகளுக்குச் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களை ( harsh chemicals) பயன்படுத்த வேண்டாம்” என்று எச்சரிக்கிறார்கள் நகைக்டை உரிமையாளர்கள்.
இந்த நிலையில், “24 மணி நேரமும் நகையை அணிய வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து நகைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். அதோடு நகைகளின் இடுக்கில் அழுக்குகள் சிக்கும் நிலையில், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் (open wounds) இருந்தால் அவை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். வீக்கம் உண்டாகலாம். தூக்கத்தின்போது நகைகள் உடைந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. நகைகளுக்கு மேல் போடப்படும் மேக் அப்பால் நகைகளுக்குக் கீழே உள்ள தோலின் நிறம் மாறுவதற்கும், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
