8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம்.
8வது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்புகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 7வது சம்பள கமிஷனின் 10 ஆண்டு காலம் டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. இதனால், 8வது சம்பள கமிஷனை உருவாக்கும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. ஊழியர்கள் எவ்வளவு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம், புதிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் எப்படி இருக்கும், எப்போது பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் போன்ற கேள்விகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழு தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, சம்பள உயர்வு, அடிப்படை சம்பள திருத்தம் மற்றும் நிலுவைத் தொகை (arrears) குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், பெரும்பாலான கணிப்புகள் ஜனவரி 2026-க்கு பதிலாக 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமலாக்கம் இருக்கும் என்று கூறுகின்றன. இந்த தாமதம், பரிந்துரைகள் கடந்த காலத்திற்குப் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட்டால், கணிசமான நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்கலாம்.
7வது சம்பள கமிஷனின் காலம் டிசம்பர் 31 அன்று முடிவடைவதால் இந்த இடைவெளியைத் தவிர்க்க, மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை ஏற்கனவே அறிவித்து, அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷனுக்கு அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அரசு அதை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்து, அறிவிக்க சுமார் 3 முதல் 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும்.
எனவே, 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவது யதார்த்தமான காலக்கெடுவாகக் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதே காலக்கெடுவைத்தான் நிபுணர்களும் கூறுகின்றனர். 8வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு சுமார் 30 முதல் 34% சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வை வழங்ககும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் தான். இது அடிப்படை சம்பளத்தை திருத்தியமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு காரணி ஆகும்.
எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும்?
8வது சம்பள கமிஷன் ஜனவரி 2028 இல் அமல்படுத்தப்பட்டு ஜனவரி 2026 முதல் கடந்த காலத்திற்குப் பொருந்தும் வகையில் நிலுவைத் தொகை வழங்கப்பட்டால், ஊழியர்களுக்கு 24 மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.
மாதாந்திர சம்பள உயர்வு: ரூ. 11,900
நிலுவைத் தொகை காலம்: 24 மாதங்கள்
மொத்த நிலுவைத் தொகை: ரூ. 2.85 லட்சம்
எனவே, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியர் சம்பள திருத்தத்தின் மூலம் மட்டும் சுமார் ரூ. 2.8 லட்சம் முதல் 3 லட்சம் வரை நிலுவைத் தொகையாகப் பெறலாம். உயர் சம்பள நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு, நிலுவைத் தொகை கணிசமாக அதிகமாக இருக்கும்.
