எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?: ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

இன்று பிரதமர் மோடி சென்னையில் ரோடுஷோ நடத்திய நிலையில், மதுரையில் பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், “எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 9) பிரச்சாரம் செய்தார்.

மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “ கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! இங்கு பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே… அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்!

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதற்குக்கூட, உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் நிலைமையை உருவாக்கியிருக்கிறார்.

கர்நாடகாவும் வறட்சி நிவாரணம் கேட்டு, உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த இரண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லியில் சாலையில் போராடும் அவல நிலையை ஏற்படுத்தினார் பிரதமர்.

மேற்கு வங்கத்திற்கும் இதே நிலைமைதான்!

மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது? குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். ஆட்சியைக் கலைத்தார். ஆளும் கட்சியை உடைத்து, இப்போது அந்த மாநிலத்தையும் நாசமாக்கிவிட்டார்!

அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்ன நிலைமை? பழங்குடியின முதலமைச்சரான ஹேமந்த் சோரனை கைது செய்தார்!

டெல்லியிலும். பஞ்சாப்பிலும் என்ன செய்தார்? அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை விட்டுத் தொல்லை கொடுக்கிறார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தல் அறிவித்ததற்குப் பிறகு கைது செய்தார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், E.D. – I.T. – C.B.I. – ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா!

இவரை எதிர்த்து யாராவது பேசினால் என்ன நடக்கும்? சமீபத்திய உதாரணம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்! அவர் என்ன சொன்னார்!
2019-இல் நடந்த புல்வாமா தாக்குதல், அரசியல் ஆதாயத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. ஊழல்வாதிகள் அவர்கூடவே இருப்பதால், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விளக்கமாக ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தார். உடனே அவர் வீட்டில் C.B.I. ரெய்டு! எவ்வளவு மலிவான அரசியல்?

பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்?

குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா?
மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாரா?

அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன கூறினார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் வன்புணர்வு செய்தார்.

இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள்கணக்கில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்கள்.

காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார்கள்!

இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடிதான்!
ஹத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி தலித் பெண் ஒருவர், வன்புணர்வு செய்யப்பட்டு இறந்தாரே! அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்தார்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே? இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ.க. ஆட்சி!

பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா?
மோடி இந்த நாட்டிற்குச் செய்தது என்ன? ஒருதாய் மக்களாக வாழும் மண்ணில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்தினார். மக்களுக்காகப் பேசுகிறவர்களைச் சிறையில் தள்ளி ரசித்தார்! எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ் – கல்புர்கி கொல்லப்பட்டதை மவுனமாக வேடிக்கை பார்த்தார்!

மதவெறியர்களின் வன்முறையையும் – கொலைகளையும் – தாராளமயமாக்கினார்! இப்படிப்பட்டவரை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது ஜூன் 4-ஆம் தேதி அவருக்குத் தெரியத்தான் போகிறது!

இப்போது புதிதாக என்ன சொல்கிறார் பிரதமர்? நாங்கள்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்தோமாம்! எவ்வளவு பெரிய பொய்! அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு – என்று சொல்லுவார்களே! அதுபோன்றுதான் இருக்கிறது. பா.ஜ.க. தமிழ்நாட்டு வளர்ச்சிக்குத் தடுத்த திட்டங்களைப் பட்டியல் போடலாமா?

தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க சோனியா – மன்மோகன் சிங் – கலைஞர் – ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கினார்களே!

ஏன், பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டித் தராமல் தமிழ்நாட்டிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே! இந்த எய்ம்ஸ் உடன் அறிவித்த, மற்ற பா.ஜ.க. ஆளும் மாநில எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம், பயன்பாட்டிற்கு வந்துவிட்டதே. ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வரவில்லை.

தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” என்று கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வெள்ள பாதிப்புகளை களைய முன்னுரிமை : சென்னையில் மோடி ரோடுஷோ!

விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ ரிலீஸ் தேதி இதுதானா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share