“உடலுழைப்பென்றால் 8 முதல் 12 மணி நேரம்கூட செய்யலாம். மூளை உழைப்பென்றால் 6 மணி நேரம்தான் செய்ய முடியும் என்கிற கருத்தொன்று பரவலாக இருக்கிறது.
இதேபோல, உடலுழைப்பு அதிகமாகச் செய்பவர்களிடம் மூளை உழைப்பு குறைவாக இருக்கும் என்றும், மூளை உழைப்பு அதிகம் செய்பவர்களிடம் உடலுழைப்பு குறைவாக இருக்கும் என்றும்கூட கருத்து இருக்கிறது.
ஆனால், இவை எதுவுமே உண்மை கிடையாது” என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள்.
மூளை உழைப்பு செய்பவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தாலும், உடலின் குறிப்பிட்ட சில தசைகள், தண்டுவட எலும்புகள், கழுத்தெலும்புகள், கை எலும்புகள் மற்றும் அவை சார்ந்த தசைகள் எல்லாமே வேலை செய்துகொண்டுதான் இருக்கும்.
உடலுழைப்பாளர்களை எடுத்துக்கொண்டால், எவ்வளவு கடின வேலை செய்தாலும் குறிப்பிட்ட சில தசைகள் மட்டுமே வேலை செய்யும். தவிர, இவர்களுக்கும் அந்த வேலை தொடர்பாக மூளை தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டேதான் இருக்கும்.
குறிப்பாக, நாள் முழுக்க நம்முடைய மூளை வேலை செய்துகொண்டேதான் இருக்கும்… நாம் தூங்கும்போதுகூட. மூளை உழைப்பில் இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுக்க அலுவலக நேரமென்பது 8 மணி நேரமே என்றாலும், அதில் உற்பத்தியும் உருவாக்கமும் 3 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, தொழில் சாராத பேச்சுகள், அரட்டை, தொலைப்பேசி பேசுவது என மனித மூளை பல திசை திருப்புதலுக்கு ஆளாகக்கூடியது.
`கடினமாக உடலுழைப்பு செய்பவர்கள் ஆரோக்கியமானவர்கள், அப்படிப்பட்ட உழைப்பு இதயத்துக்கு நல்லது’ என்கிற கருத்துகள் சமூகத்தில் இருக்கின்றன.
உண்மையில், தொடர்ச்சியாக 10 அல்லது 12 மணி நேரம் உடலுழைப்பு செய்தால் அது அவர்களுடைய இதயத்துக்கு நல்லதல்ல. இவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஓய்வைக் கட்டாயம் எடுக்க வேண்டும்.
“உடலுழைப்பு செய்பவரோ, மூளை உழைப்பு செய்பவரோ, தினமும் 8 – 9 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். அப்போதுதான் 3 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள். இந்த நேரத்தில், இதயத்துடிப்பு, மூச்சு விடுதல் போன்ற தன்னிச்சை செயல்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க, மூளை 90 சதவிகிதம் வரை ஓய்வில் இருக்கும். இது உங்கள் மூளைத்திறனை மட்டுமல்லாமல், உடலையும் புத்துணர்வாக்கும்” என்கிறார்கள் நரம்பியல் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேப்பை தேன்குழல்
பிரச்சனைகள் பலவிதம் அதில் இது தனி ரகம் – அப்டேட் குமாரு