எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

Published On:

| By Jegadeesh

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 27 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (மார்ச் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 29) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற சூர்யா, கார்த்தி

திருச்சி தாக்குதல்: திமுகவினருக்கு ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share