அதிமுக தலைமையை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஓராண்டாக கடும் போட்டி நிலவி வந்தது. அதை இன்று (ஏப்ரல் 20) கிட்டத்தட்ட முடித்து வைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
கடந்த மார்ச் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தவிர யாரும் போட்டியிடாத நிலையில்… சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி.

அதன் விசாரணையில், தேர்தல் ஆணையம் வரும் 21-ந் தேதிக்குள் உரிய முடிவை தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலையிலும், மாலையிலும் என 2 கட்ட அமர்வுகளில் தீவிர ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் ஆணையம் தனக்கு சாதகமாகவே தீர்ப்பளிக்கும் என்பதை முன்னரே கணித்து தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை இருக்கும் வரை… எடப்பாடியின் அடுத்த மூவ்! என்ற தலைப்பில் கடந்த 18 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
”16ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் முக்கியமான நிர்வாகிகளோடு தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.
அப்போது, ’கர்நாடக தேர்தலில் போட்டியிட ஈரோடு கிழக்கு போல உச்சநீதிமன்றத்தை அணுகி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்து சின்னத்தை வாங்கியிருக்கலாமே?’ என்று சிலர் கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, ‘ஈரோடு கிழக்கு தேர்தல் நமக்கு முக்கியமான விஷயம். அதனால போர்க்கால அடிப்படையில உச்ச நீதிமன்றத்துக்கு போனோம். அது தற்காலிகமான வழிமுறை. அதே வழிமுறையை இப்பவும் பின்பற்ற முடியாது.
தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கணும். அதனாலதான் டெல்லி ஹைகோர்ட்டுக்கு போனோம். தேர்தல் ஆணையம் நமக்கு சாதகமாதான் முடிவெடுக்கும்.
ஒருவேளை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கறதுக்குள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிஞ்சிட்டா கூட கவலைப்பட வேணாம். நமக்கு கர்நாடக தேர்தல் முக்கியமில்லை. இரட்டை இலையை நிலை நிறுத்திக்கறதுதான் முக்கியம்’ என்று விளக்கியிருந்தார் எடப்பாடி.
இந்நிலையில் தான் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்னரே, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இதன்மூலம் எடப்பாடி எதிர்பார்த்தது போலவே இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இனி திருச்சி மாநாடு நடக்காது: விஜயபாஸ்கர்
எடப்பாடிக்கு வெற்றி: தேர்தல் ஆணையத்தின் கடிதம் என்ன சொல்கிறது?