நமது நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டைப் போலவே நாட்டில் உள்ள அனைவரும் தத்தமது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிட வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதற்காக உங்கள் அருகே இருக்கும் அஞ்சலகங்களில் தேசியக் கொடியை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
வீடுகளில் தேசியக் கொடியேற்றி, கொடியோடு செல்ஃபி எடுத்து அதை வலைப்பதிவேற்றம் செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவரங்களை உள்ளடக்கி இன்று (ஆகஸ்டு 13) காலை தினத்தந்தி நாளிதழில் மத்திய அரசின் சார்பில் முழுப்பக்க வண்ண விளம்பரம் 5 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நாம் வாங்கிய தினத்தந்தி நாளிதழில் வெளியான, இந்த விளம்பரத்தில் வீட்டு வாசலில் தேசியக் கொடியேற்றி குடும்பத்தினர் நிற்கும் புகைப்படமும் வண்ணத்தில் இடம்பிடித்துள்ளது.
ஆனால் அந்த வீட்டு முகப்பில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் தமிழில் இல்லை. கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீமல்லிகார்ஜுன நிலையம்’ என்று அந்த வீட்டின் பெயர் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு வாசகர்கள் உற்று நோக்கி மோடியின் விளம்பரத்தில் உள்ள வீட்டின் முகப்பில் கன்னட வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகிற விளம்பரத்தில் அந்த வீட்டின் முன்னால் தமிழ் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதுதானே இயல்பாக இருக்க முடியும்?
தமிழ் தமிழ் என்று மோடி எங்கு சென்றாலும் முழங்குகிறார். இப்போது கூட நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைப் பற்றி புகழ்ந்தார்.
ஆனால் அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் தமிழின் முன்னணி நாளிதழில் மத்திய அரசு கொடுக்கும் தேசிய கொடி விளம்பரத்தில், எப்படி கன்னட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் வீட்டின் படம் வைக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
விளம்பரத்தை வடிவமைத்த அதிகாரிகளின் தற்செயல் பிழையா அல்லது திட்டமிட்ட செயலா, விளம்பரத்தை அச்சிடும் தினத்தந்தி போன்ற தமிழ்நாட்டின் முத்திரை பதித்த முன்னணி பத்திரிகையில் இருக்கும் உயர் அலுவலர்கள் கூட இதையெல்லாம் கவனிக்க மாட்டார்களா?
–வேந்தன்