1 ,2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமை அதிக அளவு இருப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று (ஆகஸ்ட் 16) உத்தரவிட்டுள்ளது.
ஒன்று, இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, இது தொடர்பாகப் பறக்கும் படை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவில், வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? எனப் பறக்கும் படையினர் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படும் போது அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
