காவல்துறை உயர் அதிகாரிகள் மீது அதிரடி குற்றம்சாட்டிய மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்று உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். Home Secretary orders action against DSP Sundaresan
மயிலாடுதுறை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுந்தரேசன் தனக்கு கொடுத்த காவல் வாகனத்தை விதிமுறைகளை மீறி பறித்துக்கொண்டனர் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் முதல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி வரையிலான அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
காவல் சீருடையில் உரிய அனுமதியின்றி பேட்டி கொடுத்ததாக அவரை தமிழக உள்துறை சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக மின்னம்பலத்தில் டிஜிபி சுந்தரேசன் சஸ்பெண்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
டிஎஸ்பி சுந்தரேசன் அளித்த பேட்டியின் மூலமும் தஞ்சாவூர் சரக டிஐஜி அளித்த விசாரணையின் அறிக்கையின் அடிப்படையிலும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
1.02.06.2025 தேதியிட்ட தலைமை அலுவலக சுற்றறிக்கை குறிப்பாணை எண். 01759/ பொது 1(1)/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி, துணை காவல் கண்காணிப்பாளர் எம். சுந்தரேசன், உயர் அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமல் பத்திரிகை/ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் உயர் காவல் அதிகாரிகள் மீது வேண்டுமென்றே ஆதாரமற்ற/அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
2. அரசு வாகனம் எதுவும் தனக்கு வழங்காமல் அநீதி இழைப்பதாக ஊடகங்கள் முன் வேண்டுமென்றே கூறியுள்ளார். 17.07.2025 அன்று அரசு வாகனம் அவருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 11.07.2025 அன்று விவிஐபி பந்தோபஸ்துக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 44 வாகனங்கள் பெறப்பட்டன. அப்படிதான் டிஎஸ்பி வாகனமும் பெறப்பட்டு திரும்ப கொடுக்கப்பட்டது.
3. டிஎஸ்பி பெண் காவல் ஆய்வாளரான அன்னை அபிராமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்தார். அதனால் அந்த பெண் ஆய்வாளர் மிகுந்த துயரங்களுக்கு ஆளானார். தற்கொலை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவரது சக ஊழியர்கள் பெண் ஆய்வாளரை ஆறுதல்படுத்தி தடுத்தனர்.

4. தனது அலுவலகத்திற்கு ஒரு ஏசி மற்றும் ஒரு பிரிண்டரை நிறுவுவதற்காக, PEW பிரிவின் எஸ்.ஐ முருகவேல் மீது தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தினார் டிஎஸ்பி சுந்தரேசன். VHF மைக் மூலம் கீழ்நிலை காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார்.
5.காவல்துறையில் பின்பற்றப்படும் முறையான குறை தீர்க்கும் வழிமுறையின்படி, மூத்த அதிகாரிகளை அணுகி தனது குறைகளைத் தெரிவிக்க அவர் தவறிவிட்டார்.
6.ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும், பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கமின்மையுடனும் செயல்பட்டுள்ளார்.

எனவே மேற்கண்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டு, அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவருக்கு விதி 53 (1) இன் கீழ் வாழ்வாதாரப் படி மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும்.
ஆனால் இந்த இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசின் உரிய அனுமதி இன்றி சுந்தரேசன் மாவட்ட தலைமையகத்தில் இருந்து வெளியேறக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் உத்தரவுபடி உள்துறை செயலாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். Home Secretary orders action against DSP Sundaresan
