“பரீட்சை முடிஞ்சுடுச்சு… அப்பாடான்னு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, அதுக்குள்ள அடுத்த வாரமே கிளாஸ்னு சொல்றாங்களே?” என்று புலம்பித் தவிக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விடுமுறை எப்போது?
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்ததும், இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் புத்தாண்டு முடிந்து ஜனவரி 2, 2026 (வியாழக்கிழமை) அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்னை என்ன?
பொதுவாக அரசுப் பள்ளிகளில் விடுமுறை முழுமையாக விடப்படும். ஆனால், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், “பொதுத் தேர்வு நெருங்குகிறது, சிலபஸ் முடிக்க வேண்டும்” என்று காரணம் காட்டி, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்துவது வழக்கம். இதனால் மாணவர்கள் மனதளவில் சோர்வடைகின்றனர் என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது.
கல்வித்துறை வார்னிங்:
இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEOs) ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் எந்தப் பள்ளியும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. விடுமுறை என்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்காகவே வழங்கப்படுகிறது. இதை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வருஷம் முழுவதும் படித்துக் களைத்திருக்கும் மாணவர்களுக்கு, இந்தப் பொங்கல் மற்றும் அரையாண்டு விடுமுறைதான் ஒரு பெரிய ரிலாக்ஸேஷன். அந்த நேரத்திலும் ‘படி படி’ என்று நெருக்கடி கொடுப்பது, மாணவர்களுக்குப் படிப்பின் மீது வெறுப்பைத்தான் உண்டாக்குமே தவிர, மதிப்பெண்ணை உயர்த்திவிடாது. பெற்றோர்களும் இதை உணர்ந்து, தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க வேண்டும்!
