தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது சற்று தணிந்து காணப்படுகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பங்களுடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த மக்கள், தற்பொழுது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு அதிகம் பேர் வந்த வண்ணம் உள்ளனர்.
தர்மபுரியில் இருந்து 46 கிலோ மீட்டரும், பெங்களூருவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள ஒகேனக்கல் அருவி தமிழ்நாட்டின் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இங்குள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் குளிக்க வருவார்கள். மேலும் இங்கு பரிசல் பயணம் மிகவும் பிரபலம்.
இந்நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் ஒகேனக்கலின் முக்கிய சுற்றுலா இடங்களான ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிகமாக கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தற்போது நீர்வரத்து அதிகரித்து இருக்கும் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பரிசல் பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால், மறு உத்தரவு வரும் வரை பரிசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவலாக பெய்து வரும் கன மழையால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
