இமாச்சல பிரதேசத்தில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற அமோக வாய்ப்பிருந்த நிலையில் தோல்வியுற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம்(10), கர்நாடகா(4) மற்றும் இமாச்சல பிரதேசம்(1) ஆகிய மாநிலங்களில் மொத்தம் 15 ராஜ்ய சபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை ஒரேயொரு இடத்திற்கான போட்டியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் நிலவியது. Congress lost Rajya Sabha in Himachal
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியிட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதியில் 40 இடங்களை வென்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 25 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றன.
எனவே காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்ற நிலை இருந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
இதனால் இரு கட்சிக்கும் 34 வாக்குகள் கிடைத்த நிலையில், டாஸ் போடப்பட்டு அதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சி இழக்கும் காங்கிரஸ்?
இந்த தோல்வியால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியையும் காங்கிரஸ் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 35 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் தற்போது 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாற்றி வாக்களித்ததை அடுத்து பாஜக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
இந்த வெற்றி குறித்து இமாச்சல் பாஜக மாநில தலைவர் ஜெய்ராம் தாக்கூர் பேசுகையில், ”இது பாஜகவின், நரேந்திர மோடியின், அமித்ஷாவின் வெற்றி. இந்த தோல்வியை ஏற்று முதல்வர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நேர்மையை விற்று விட்டார்கள்!
முதல்வர் சுக்வீந்தர் சிங் அளித்த பேட்டியில், ’காலை வரை எங்களுக்கு விசுவாசம் காட்டிய அந்த 9 பேரும், தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து தங்கள் தங்கள் நேர்மையை விற்றுவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தோல்வியுற்ற அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ”காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்த 9 எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் மனிதனின் நிலையற்ற தன்மை, துரோகம் குறித்து இன்று எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர்” என வேதனை தெரிவித்துள்ளார்.
உ.பி., கர்நாடகா தேர்தல் நிலவரம்!
மற்ற இரு மாநிலங்களை பொறுத்தவரை, உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 10 ராஜ்யசபா தொகுதிகளில் 8 இடங்களை பாஜகவும், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களையும் கைப்பற்றின.
கர்நாடகவில் 4 இடங்களுக்கான போட்டியில் காங்கிரஸ் மூன்றிலும், பாஜக ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாநிலங்களவை தேர்தல் : மாறிய ஒத்த ஓட்டு… கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி!!
ரஞ்சி கோப்பையில் சதமடித்து… சிஎஸ்கே பவுலர் புதிய சாதனை!
Congress lost Rajya Sabha in Himachal