பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 1) சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், “நம்ம சாலை”என்ற புதிய மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான சாலை உள்கட்டமைப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கவும், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை அணுகுவதை எளிதாக்குவதில் சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே தமிழ்நாடு அரசானது முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை, உருவாக்கி, பராமரித்து வருகிறது.
இச்செயலியின் மூலம், நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து, பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் பிறகு, சரி செய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், “நம்ம சாலை” செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளிக்கும் பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும். அதன்படி சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமில்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றைக் குறித்தும் புகார்கள் அளிக்க ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு முறையில் நிரந்தர அலைபேசி எண், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள 45 கோட்ட பொறியாளர்கள், 192 உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் 274 உதவி பொறியாளர்களுக்கும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் “நிரந்தர தொலைபேசி எண்” வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லியோ வெற்றி விழா: ரஜினியை சீண்டிய ரத்ன குமார்?
அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!
