“என் கைதில் ஆளுநருக்கும் தொடர்புள்ளது” -சட்டமன்றத்தில் சீறிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

Published On:

| By Aara

Hemant Soren accuses Jharkhand governor

Hemant Soren accuses Jharkhand governor

“நான் கைது செய்யப்படுவதற்கு ஆளுநர் மாளிகைக்கும் தொடர்புள்ளது” என்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அம்மாநில சட்டமன்றத்திலேயே இன்று (பிப்ரவரி 5) பேசியுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனும் சர்ச்சைக்குரிய ஆளுநர்கள் வரிசையில் சேர்ந்துள்ளார்.

ஜனவரி 31 ஆம் தேதி இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்படும் விளிம்பில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதனால் அடுத்த முதல்வராக சம்பாராய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்றத்தில் நடந்த புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் நீதிமன்ற அனுமதியோடு இன்று முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்துகொண்டார். இந்த வாக்கெடுப்பில் சம்பாய் அரசு வெற்றி பெற்றது.

முன்னதாக சட்டமன்றத்தில் பேசிய ஹேமந்த் சோரன்,

“ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ராஜ்பவனுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.

நாங்கள் இப்போதும் தோல்வியடையவில்லை. என்னைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பதன் மூலம் அவர்கள் வெற்றிபெற முடியும் என்று நினைத்தால் அது முடியவே முடியாது…

அவர்களுக்கு சொல்கிறேன். இது ஜார்கண்ட். பலர் தங்கள் உயிரைக் கொடுத்து உருவான மாநிலம் இது.

பழங்குடியின முதல்வர் இம்மாநிலத்தில் பதவியில் இருப்பதை பாஜக விரும்பவில்லை. அதனால்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது.

ஹேமந்த் சோரனுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இன்று முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த கிராமத்துக்குச் சென்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் ஹேமந்த் சோரனின் திட்டங்களைக் காணலாம்.

இன்று 8.5 ஏக்கர் நில மோசடி வழக்கில் நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.  தைரியம் இருந்தால், என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்டுங்கள். நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன்” என்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசினார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.

ஹேமந்த் சோரன் பதவி விலகிய பிறகு உடனடியாக ஜே.எம்.எம். சட்டமன்ற கட்சித் தலைவராக அதாவது முதல்வராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையிலும்… ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடனடியாக புதிய அரசை பதவியேற்க அழைக்கவில்லை.

ஜே.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலை பேசுவதற்காகத்தான் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் என்று ஏற்கனவே ஜே.எம்.எம். கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இதனால் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹைதராபாத்துக்கு அனுப்பியது.

இந்த நிலையில், ‘முதல்வர் கைதுக்கு ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருக்கிறது” என்று பதவியை இழந்த ஹேமந்த் சோரன் சட்டமன்றத்திலேயே பேசியிருப்பது இந்திய அரசியலை கவனிக்க வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

“பெட்டி மீது தான் ஸ்டாலினுக்குக் கண்ணு”: எடப்பாடி பழனிசாமி

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள்: நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Hemant Soren accuses Jharkhand governor

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share