சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேற்று ஒரே சமயத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வரும் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாள் விடுமுறையை கொண்டாட இருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தீபாவளி மறுநாளும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி நான்கு நாள் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வழக்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 2165 பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தமாக 4,257 பேருந்துகள் மூலம் நேற்று இரவு சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இது தவிர ஆம்னி பேருந்துகளிலும், கார், இருசக்கர வாகனங்களிலும் பயணித்தனர்.
இதன் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதலே பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட், மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்ததாலும் கூட்ட நெரிசலாலும் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேசமயம் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்ச் பை இன்ச்சாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மதுரவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைவேகத்தில் தான் பேருந்துகள் சென்றன.
இந்தசூழலில் நேற்றிரவு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
மொத்தத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையெடுத்துள்ளனர் என தகவல்கள் வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
