தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடலை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
ஆகஸ்ட் 5-ந் தேதி செவ்வாய்க்கிழமையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும்; தேனி, தென்காசி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது; கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
ஆகஸ்ட் 6-ந் தேதியன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
