தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்து வருவதால் திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, நாகை உள்ளிட்ட மொத்தம் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மதுரையின் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது.
