திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 5) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் இன்று ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்க உள்ளது. இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) வடக்கு-வடகிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு- தென்மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு- தென்மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே அடுத்த 4 மணி நேரத்தில் தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் & தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் & தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள், ஒடிசா கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தெலங்கானா… காங்கிரஸ் அண்ணாவா? ஆர்.எஸ்.எஸ். அண்ணாவா? யார் இந்த ரேவந்த் ரெட்டி?
தெலங்கானா முதல்வர் தேர்வு தாமதம்: ரேவந்த் ரெட்டிக்கு சவால் விடும் சீனியர்கள்?