சென்னையில் காலை முதல் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் கடந்த வார இறுதியில் டிட்வா புயல் உருவானதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை டிட்வா புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எனினும் இன்று (டிசம்பர் 1) காலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூரில் மழை வெளுத்து வாங்கியதில் அங்கு 13 செமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வேளச்சேரியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில், தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீர் அதிகரிக்குமானால் மக்களை மீட்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பாலம் அருகே பைபர் படகுகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே இருக்கக்கூடிய சர்வீஸ் சாலையில், காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த மழைநீரில் கார் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கார் ஓட்டுநர் காரை எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. மேலும் மழை காரணமாக மெல்ல மெல்ல கார் மூழ்க ஆரம்பித்தது. எனவே ஓட்டுநர் காரை விட்டு உயிர் பிழைக்கும் விதமாக தப்பியோடிய காட்சி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிராமபுரத்தில் மழை காரணமாக மரம் சாய்ந்ததில் குறுக்கே வந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் நாளை காலை வரை சென்னையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
