இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து திருப்பதியில் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டம் எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக அலைமோதியதால் பக்தர்கள் தங்கும் விடுதி நிரம்பி வழிந்தது. மேலும் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 411 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், “வார இறுதி என்றாலே திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை அன்று 94 ஆயிரத்து 417 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. தரிசனத்திற்கான காத்திருப்பு வரிசைகள் முழுவதுமாக நிரம்பின. இருப்பினும் பக்தர்கள் அமைதியாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.” என்று தெரிவித்தார்கள்.
நேற்று சுவாமி தரிசனம் செய்ய சுமார் 16 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
