�திருமணம் மற்றும் சுப வைபவங்களில் எத்தனையோ இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டாலும் கேசரிக்குச் சிறப்பான இடம் உண்டு. கடைகளில் கிடைக்கும் பல இனிப்புகளை வீட்டில் தயாரிப்பதில் சிரமங்கள் இருக்கும். வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் சுவையான ஓர் இனிப்பு செய்ய முடியும் என்றால் அது கேசரியே. தற்போது பல திருமண வைபவங்களில் காலை உணவுடன் பரிமாறப்படும் இந்த பைனாப்பிள் கேசரியை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
**என்ன தேவை?**
அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்
ரவை – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – கால் கப்
கேசரி கலர் (மஞ்சள்) – கால் டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 6
உலர்திராட்சை – 3
தண்ணீர் – 3 கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
அன்னாசிப்பழத்தைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து ரவையை வறுத்தெடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை சேர்த்துத் தாளித்து, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் மஞ்சள் கலர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும் அன்னாசிப்பழக்கூழ், வறுத்த ரவையைச் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். நன்றாகக் கிளறியபின், தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் நன்கு வேகவிடவும். பின்னர் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இது சற்று இளகி, மீண்டும் கெட்டிப்படும். அதை நன்கு கிளறிப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: பாசிப்பருப்பு அல்வா](https://minnambalam.com/health/2019/12/17/83/kitchen-keerthana-pasiprupu-halwa)
�,