ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். Remdesivir, Tocilizumab, Enoxaparin போன்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து இந்தத் தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்குச் செலுத்தி நோய் எதிர்ப்புத் திறனைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக அமையும் என்பது உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில், தடுப்பூசியைச் சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) சென்னையைத் தெர்வு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு,
“சென்னையைப் பொறுத்தவரையில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்தத் தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலில் உருவாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும். முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தடுப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் எனவும் தமிழக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
**எழில்**�,