ஜவ்வரிசியை எடுத்தாலே நாம் செய்யக்கூடிய ஒரே உணவு பாயசம்தான். ஆனால், ஜவ்வரிசியில் சுவையில் சொக்கவைக்கும் வடையும் செய்து வீட்டிலுள்ளவர்களை ஆச்சரியப்படுத்தலாம்.
என்ன தேவை?
நைலான் ஜவ்வரிசி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
தோல் நீக்கி, பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியில் அது மூழ்கும் அளவு நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பொடித்த வேர்க்கடலை, இஞ்சித் துருவல், நறுக்கிய மல்லித்தழை சேர்த்து வடை மாவு போல் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவைச் சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.