காலத்தின் மாற்றத்தைக் கட்டாயமாக்கிக்கொண்டிருக்கும் இன்றைய நாள்களில் நம் பாரம்பர்ய சுவை மிகுந்த நாட்டுப் பண்டங்களை சுவைக்க மறந்துகொண்டிருக்கிறோம். ருசியும் ஆரோக்கியமும் ஒருசேர பெற்றிருப்பவை நம் பாரம்பர்ய சுவைமிக்க நாட்டுப் பண்டங்கள். அவற்றில் சிறப்பானது இந்த வரகரிசிக் கஞ்சி. ரிலாக்ஸ் டைமில் இதைச் சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
100 கிராம் வரகரசியை வெறும் வாணலியில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துவைக்கவும். குக்கரில் வறுத்துப்பொடித்த வரகரிசியுடன் ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சித்துருவல், 10 பற்கள் நசுக்கிய பூண்டு, எட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை அல்லது புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்விட்டு நன்கு குழையும் வரை ஐந்து விசில் விட்டு இறக்கிக் கடையவும். விருப்பப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளலாம். அரை பழம் எலுமிச்சைச்சாறு அல்லது அரை டம்ளர் மோர்விட்டு நன்கு கலந்தும் குடிக்கலாம்.
**சிறப்பு**
இந்தக் கஞ்சி நம் உடலில் தேங்கியுள்ள வாய்வுகளைக் கரைத்து நீக்கும். வாய்வுக்கோளாறு, வயிற்றுப்பொருமல் ஆகியவற்றை நீக்கும். வாத உடம்புக்காரர்களுக்கு மிகவும் சிறந்த சத்தான பாரம்பர்ய கஞ்சி. காய்ச்சலைப் போக்கும். உடல்வலியைக் குறைக்கும்.�,