திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், அதில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டதால் உடனடியாக சென்னைக்குத் திரும்பினார்.
அடுத்த நாளே சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். நேற்று (செப்டம்பர் 23) அதன் முடிவு வெளியான நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி தற்போது ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது மகனின் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதியின் மகனும், மருத்துவருமான சாய் லட்சுமிகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இப்போது அப்பா நலமாக உள்ளார். நோயின் தன்மையும் குறைந்த அளவே உள்ளது. நோய் அறிகுறிகளும் இல்லை. மூச்சுவிடுவதிலும் எந்த சிக்கலும் இல்லை. வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேறு யாருக்கும் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும்,”அவரின் மீது அன்பும் பாசமும் கொண்ட கழக உடன்பிறப்புகள் அவரை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம். அவரின் உடல்நிலை குறித்து தகுந்த நேரத்தில் தகவல்களை என் முகநூலில் பதிகிறேன். தொலைபேசியிலும் முகநூலிலும் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி. விரைவில் அப்பா மீண்டு வருவார்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
**எழில்**
�,