தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய சீனாவை விட பாதிப்பில் தமிழகம் முன்னேறி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 30) வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உள்பட 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. இவர்களில் 38,889 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 2,325 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 50,074 பேர் பூரண நலமடைந்துள்ளனர். இன்று 60 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 90 கொரோனா பரிசோதனை நிலையங்கள் இயங்குவதாகவும், இவை மூலம் இன்று மட்டும் 30,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 11,16,662 பேருக்கு சோதனை நடந்துள்ளதாகவும் அரசு அறிக்கை கூறுகிறது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் அதிகமாக சென்னையில் 888 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5,419 பேரும், திருவள்ளூரில் 3,830 பேர், மதுரையில் 2,557 பேரும், காஞ்சிபுரத்தில் 1977 பேர், திருவண்ணாமலையில் 1,824 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
**எழில்**�,