Xஇன்று 759: 100 ஐத் தாண்டிய உயிரிழப்பு!

health

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதிலும், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழக சுகாதாரத் துறை இன்று (மே 23) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். ராஜஸ்தானிலிருந்து திரும்பிய 6 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து திரும்பிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஆண்கள் 9,876 பேரும், பெண்கள் 5631 பேரும், திருநங்கையர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,915 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 7,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 12,155 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 3,79,811 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 5,518 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீப நாட்களில் இறப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்கள் வாரியாக பார்க்கும்போது சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,364 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து செங்கல்பட்டில் 39 பேருக்கும், திருவள்ளூரில் 17, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *