ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிதி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம் ”ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் குடும்ப வறுமைகளை கவனத்தில் கொண்டு தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயங்களுக்குத் தடை விதித்தது போல தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தடை விதிக்க முடியாது என்று வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று (ஜூலை 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
அந்த பதில் மனுவில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது.
பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தின கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், ஒரு போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது” என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு அரசின் தடை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை வரும் ஜூலை 13 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
