இருசக்கர வாகன இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் சிறிய அறை அமைத்து கட்டுக்கட்டாக ஹவாலா பணம் கேரளாவிற்கு எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஹவாலா பணத்தை கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சேலத்தில் தொடங்கி, ஈரோடு, கோவை வழியாக கேரளாவின் கொச்சி வரை செல்லும் மிக முக்கியமான வழித்தடமாகும். தென்னிந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் இந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது திருட்டு வழிப்பறி, ஹவாலா பணம் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடத்து வருகிறது. இதனால் காவல் துறையினர் தொடர்ச்சியாக சோதனைச்சாவடிகள் அமைத்து குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று (டிசம்பர் 23) காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்தவர், சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றார். இதனையடுத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் திரும்பி சென்ற நபரை விரட்டி பிடித்தனர். அவரது வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டாங்கில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதில் கட்டுகட்டாக ரூ. 500 நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கேரள மாநிலம் பெருந்தல்மன்னா, மலப்புரத்தை சேர்ந்த ஷபீக் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் இருக்கையின் கீழ் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.56,50,000ஆயிரம் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் , போலீசார் விசாரணையில் அது ஹாவாலா பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தையும், கேரளாவை சேர்ந்த ஷபீக் என்பவரையும் வருமானவரிதுறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
