ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 5) ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அதன் தலைவர்களின் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அம்மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2.03 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 300- க்கும் அதிக வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில் காலை 9 மணி வரை 9.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,
“விவசாயிகளின் செழிப்புக்காக, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு குடும்பத்தின் நலன் மற்றும் சமூக பாதுகாப்புக்காக, ஹரியானா மக்கள் பெரும் திரளாக வந்து காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
மேலும் காங்கிரசுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் மற்றும் பாஜகவின் அட்டூழியங்களுக்கு எதிரான ஆயுதமாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகத்தின் இந்த புனித திருவிழாவில் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் மாநிலத்தின் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள. ” என்று பதிவிட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் இன்று ஜஜ்ஜர் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ” இன்று நான் முதன் முறையாக வாக்களித்தேன். அதுமட்டுமல்லாமல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது இளைஞர்களாகிய நமது கடைமயாகும்” என்று கூறினார்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலின் முடிவுகள் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரெக் பிடித்த தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!