மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.
இந்த பகுதி பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. நாளை அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு ஒத்துவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 10) தமிழக அரசு அறிவித்தது.
அதில், ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை – 11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, செவ்வாய்க்கிழமை- 12.12.2023 அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
6-10ஆம் வகுப்பு
அதில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 – 12.30 மணி வரையிலும், 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 – 4.30 மணி வரையிலும் நடைபெறும்.
13 ஆம் தேதி மொழிப்பாடத்துக்கான தேர்வு நடைபெறும். 14ஆம் தேதி விருப்ப மொழிப்பாடத் தேர்வு, 15ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு, 18ஆம் தேதி கணிதம், 20ஆம் தேதி அறிவியல், 21ஆம் தேதி உடற்கல்வி, 22ஆம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
11, 12ஆம் வகுப்பு
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5ஆம் வகுப்பு
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் டிசம்பர் 13ல் தெடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்ரீரங்கம் கோயில் சுவர் சிற்பங்கள் சேதம் : என்ன நடந்தது?
மழையில் பாதித்த சிறு, குறு தொழில்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!