ஹைதி நாட்டில் சிறைச்சாலைகளைத் தகர்த்து 4,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி இருப்பதால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஹைதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா இடையே அமைந்துள்ள கரீபியன் தீவு பகுதியில் ஹைதி நாடு அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மோயிஸ் மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், மோயிஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் வடுக்கள் ஆறுவதற்கு முன்பாகவே, அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் அந்த நாட்டில் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், அவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தொடர்ந்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.
கடந்த ஒரு வார காலமாக போலீஸாருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இரண்டு சிறைச்சாலைகள் மீது நள்ளிரவில் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 4,000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சிறையில் இருந்து தப்பி உள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் 72 மணி நேரத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தப்பியோடிய சிறைவாசிகளை கைது செய்வதற்காக ராணுவமும் போலீஸாரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதால் ஹைதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசு விருது : அள்ளி குவித்த ஜோதிகா, ஜெயம்ரவி, மாதவன் திரைப்படங்கள்!
டீ குடிக்கச் சென்ற பாகன்கள்… லாரியில் இருந்து இறங்கி சென்ற யானை!
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் சட்னி
எம்.பி.பதவியை ராஜினாமா செய்த நட்டா: ஏன்?