“அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்… டாலர்ல சம்பாதிக்கணும்…” என்று கனவு காணும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு, இப்போது அந்த ‘கனவு தேசமே’ ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. விசா கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த பலருக்கு, கடைசி நேரத்தில் நேர்காணல்கள் (Visa Interviews) ரத்து செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் விசா ஆவணங்கள் அல்ல; உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் ‘சோஷியல் மீடியா’ (Social Media) தான் என்பதுதான் லேட்டஸ்ட் ‘பகீர்’ தகவல்.
என்ன நடக்கிறது?
ஐதராபாத் உட்பட இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில், எச்-1பி (H-1B) விசா நேர்காணலுக்காகக் காத்திருந்த பலரின் விண்ணப்பங்கள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிலருக்கு நேர்காணலே ரத்து செய்யப்பட்டுள்ளது. “எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது, ஏன் இந்தத் திடீர் தடை?” என்று விசாரித்தபோதுதான், அமெரிக்கக் குடியேற்றத் துறை அதிகாரிகள், விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளப் பக்கங்களை ‘ஸ்கேன்’ செய்து வருவது தெரியவந்துள்ளது.
2019 விதிமுறை… இப்போ ‘டைட்’ ஆகிடுச்சு:
இது ஒன்றும் புதிய விதிமுறை இல்லை. கடந்த 2019ஆம் ஆண்டே, டிரம்ப் நிர்வாகத்தில் விசா விண்ணப்பத்தில் (DS-160 Form) சமூக வலைதள விவரங்களைக் கேட்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அப்போது பெயரளவுக்கு இருந்த கண்காணிப்பு, இப்போது மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பயன்படுத்திய ஃபேஸ்புக் (Facebook), எக்ஸ் (Twitter), இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்டு-இன் (LinkedIn) ஐடிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரிகள் இந்த ஐடிகளை ஆய்வு செய்யும்போது, விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வேலை அனுபவமும், சமூக வலைதளத்தில் உள்ள தகவல்களும் முரண்பட்டால்… அவ்வளவுதான், விசா நிராகரிக்கப்படும்!
சிக்கல் எங்கே?
பலர் விசா கிடைப்பதற்காகப் போலியான பணி அனுபவச் சான்றிதழ்களை (Fake Experience Certificates) இணைக்கிறார்கள். ஆனால், அவர்களின் லிங்க்டு-இன் புரொபைலில் வேறு விதமான வேலை விவரங்கள் இருக்கும். அல்லது ஃபேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்ட பழைய பதிவுகள், அவர்களின் உண்மையான பின்னணியைக் காட்டிக் கொடுத்துவிடும்.
இதைத்தான் இப்போது அமெரிக்க அதிகாரிகள் ‘கழுகுக்கண்’ கொண்டு கண்காணிக்கிறார்கள்.
பொய் சொன்னால் ஆபத்து:
“சரி, சோஷியல் மீடியா அக்கவுண்ட்டே இல்லை என்று சொல்லிவிடலாமா?” என்று நினைத்தால் அது இன்னும் ஆபத்து. உங்களிடம் கணக்கு இருந்து, அதை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அது மோசடியாகக் கருதப்பட்டு நிரந்தரமாகவே விசா மறுக்கப்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தில் உள்ள தகவல்களும், ஆன்லைன் புரொபைலில் உள்ள தகவல்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.
- தேவையற்ற அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
“சும்மா டைம் பாஸுக்கு ரீல்ஸ் பார்க்கிறோம்” என்று நினைக்காதீர்கள். அந்த சோஷியல் மீடியாதான் இப்போது உங்களின் அமெரிக்கக் கனவைத் தீர்மானிக்கப் போகிறது. உஷார்!
