நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவரது மக்கள் தொடர்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் கட்சித் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்காக ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி அதற்கு நிர்வாகிகளை நியமித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு சென்றுள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர், தங்களது இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கிவருகின்றனர். மேலும் 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் நேற்று முன்தினம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்திலிருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் வழியனுப்பும் நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையே ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ஒரு தகவல் இன்று (நவம்பர் 23) காலை முதல் சமூக வலைதளங்களில் உலாவரத் தொடங்கியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த தகவலில் உண்மையில்லை. அவர் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார். எனவே அவரது உடல்நிலை குறித்து தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் ரஜினிகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.�,”