Hகார் இன்சூரன்ஸ் ஒரு பார்வை

Published On:

| By Balaji

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் கார் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்தினால் உயிரிழப்பவர்கள், உடல் பாகங்களை இழப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இழப்பீடு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதேபோல பாதிக்கப்படும் கார்களை சரிசெய்வதற்கு பெரும் தொகை ஆகும். எனவே, காப்பீடு செய்வதன் மூலமாக இதுபோன்ற சில எதிர்பாராத சிக்கல்களை கையாள முடியும்.

இந்தியாவில் இரண்டு வகையான கார் இன்சூரன்ஸ்கள் இருக்கின்றன. முதலாவது மூன்றாம் நபர்களுக்கான இன்சூரன்ஸ் (Third Party Insurance), இரண்டாவது காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் ப்ளான் (Comprehensive insurance plan). மூன்றாம் நபர்களுக்கான இன்சூரன்ஸைப் பொருத்தவரை விபத்தின் காரணமாக மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்க வகை செய்கிறது. மூன்றாம் நபருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயம், சொத்து சேதம் போன்றவை இதில் அடங்கும். இதில் காருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு கிடைக்காது. இந்திய வாகனச்சட்டம் 1988-ன் பிரிவு 146-ன் படி இந்த வகை காப்பீடு கட்டாயமாகும்.

காம்ப்ரிஹென்சிவ் பாலிசியைப் பொருத்தவரை காரின் உரிமையாளருக்கு ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு நிவாரணம் கிடைக்க வகை செய்கிறது. இதில், கார் இழப்பு அல்லது பாதிப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும். அதேபோல காரின் உரிமையாளரின் உயிருக்கோ, உடலுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்கும். இதில் இரண்டு வகை இருக்கின்றன. பாரம்பரியமான திட்டம் மற்றும் பணமற்ற திட்டம்

பாரம்பரிய திட்டத்தைப் பொருத்தவரை காரின் பழுதை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பில்லைக் கொடுத்து பணத்தைப் பெறலாம். ஆனால், இந்த திட்டத்தைப் பொருத்தவரை முழு தொகையும் கிடைக்காது. அதேபோல பணத்தைப் பெறுவதில் பலவித கால தாமதம் ஆகும். பணமற்ற திட்டத்தில் இந்த சிக்கல் இல்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில பழுதுநீக்கு மையங்களோடு ஒப்பந்தம் செய்திருப்பார்கள். அந்த மையங்களில் நம் காரை பழுநீக்கம் செய்து கொள்ளலாம். அவசியமான சிலவற்றுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டி இருக்கும். மீதமிருப்பவற்றை காப்பீட்டு நிறுவனங்களே அளித்துவிடுகின்றன. இதில் காரின் உரிமையாளர் விரைவான நிவாரணம் பெற முடிவதோடு, தன் கையிலிருந்து சிறிய தொகை மட்டும் செலவிட்டால் போதும் என்பது இந்த முறையில் இருக்கும் சிறப்பம்சம் ஆகும்.

காம்ப்ரிஹென்சிவ் திட்டத்தில் காரின் உரிமையாளருக்கு மட்டுமல்லாது அவரது குடும்ப உறுப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் நிவாரணம் பெற முடியும். ஒருவேளை காருக்கு ஓட்டுநர் ஒருவரை பணியில் அமர்த்தி இருந்தீர்களென்றால் அவருக்கும்கூட பொருந்தும். கார் திருடு போனால் அதற்கான இழப்பீடு பெற முடியும். இயற்கைப் பேரிடர்களான வெள்ளம், பூகம்பம், புயல், தீ போன்றவற்றுக்கும் நிவாரணம் பெறலாம்.

காப்பீடானது காரில் சாதாரணமாக ஏற்படும் எஞ்சின் பழுது போன்றவற்றுக்குப் பொருந்தாது. விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடியும். குடித்துவிட்டு கார் ஓட்டுவதினால் ஏற்பட்ட விபத்துக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது. கலவரம், தகராறு போன்றவற்றின் காரணமாக காருக்கு ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்காது. கார் ஓட்டுநரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லையென்றாலும் நிவாரணம் கிடைக்காது. காரின் ஓட்டுநரோ, மூன்றாம் நபரோ வேண்டுமென்றே காருக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கிடைக்காது. சாதாரண காரை, கார் ரேஸில் ஈடுபடுத்தினாலும் இழப்பீடு கிடைக்காது.

ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் காருக்கென ஒரு மதிப்பு வைத்திருப்பார்கள் (Insured declared value (IDV). இதைப் பொருத்தே காருக்கான ப்ரீமியம் தொகை கணக்கிடப்படும். காரின் மதிப்பு அதிகமாக இருந்தால், ப்ரீமியம் தொகையும் அதிகமாகவே இருக்கும். காரின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, ப்ரீமியம் குறைவாக கட்டினால் என்னவென்று விபரீதமாக யோசித்தீர்களென்றால் எதிர்காலத்தில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் சிக்கிக்கொள்வீர்கள். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலோ, காருக்கு பாதிப்போ, திருட்டோ ஏற்பட்டாலோ எதிர்பார்த்த தொகை கிடைக்காது. அதேபோல, இந்த மதிப்பை வைத்தே காருக்கான மறுவிற்பனை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

தேய்மானமற்ற காப்பீடு (zero depreciation insurance)

சாதாரண இன்சூரன்ஸ் நிறுவனம் தனக்கு வரும், காப்பீட்டுத் தொகை கோரிக்கையை (insurance claim) பரிசீலிக்கும்போது, காரின் தேய்மான மதிப்பைக் கழித்துவிட்டு வரும் ஒரு தொகையையே வழங்குவார்கள். ஆனால் ஜீரோ டெப்ரிசியேசன் பாலிசியைப் பொருத்தவரை தேய்மானம் கழிக்கப்படாமல், முழு தொகையையும் பரிசீலித்து வழங்குவார்கள். கார் வாங்கி ஒரு சில ஆண்டுகள் இந்த இன்சூரன்ஸ் பாலிசி பொருந்தும்.

நீங்கள் இதுவரை கார் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யவில்லை என்றால் அடுத்த ஆண்டு ப்ரீமியம் தொகை செலுத்தும்போது ஒரு தொகையைக் கட்டணச் சலுகையாக வழங்குவார்கள். இதை நோ கிளைய்ம் போனஸ் என்று கூறுகின்றனர்.

நன்றி: http://www.financialexpress.com/

தமிழில்: ஸ்வரா வைத்தீ�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share