அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்தில் உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு மெக்ஸிகோ ஆதரவளித்துள்ளது. ஐந்து நாடுகள் பயணத்தின் ஒருபகுதியாக மெக்ஸிகோ சென்ற பிரதமர் மோடியிடம், அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ, இதற்கான உறுதியை அளித்துள்ளார். பினா தன்னுடைய உரையில், “பிரதமர் மோடியின் அணு ஆயுதப் பெருக்கம் மற்றும் அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என்பதற்கான சர்வதேச மதிப்பீட்டை ஏற்று மெக்ஸிகோ இந்தியாவுக்கு ஆதரவளிக்கிறது” என்றார். இதன்மூலம், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, மெக்ஸிகோ என மூன்று முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளன.
தனித்து விடப்படுகிறதா சீனா?
இந்த விவகாரத்தில் ஆரம்பம் தொட்டே இந்தியா உறுப்பினராக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சீனா. அணு ஆயுதப் பெருக்கத்தை எதிர்க்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும், அதனால் இந்தியா என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராக முடியாது என்றும் சீனா வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளது. அணு ஆயுதப் பெருக்கத்தை எதிர்க்கும் ஒப்பந்தம் பாரபட்சமானது என இந்தியா கருதுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா உறுப்பினராவதைக் குறித்து முடிவு செய்ய என்.எஸ்.ஜி பேரவை வருகின்ற 24, 25 தேதிகளில் கூடுகிறது.
பாகிஸ்தானும் என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராவதற்கு விண்ணப்பித்துள்ளது. பாகிஸ்தானின் விண்ணப்பம் குறித்து, பேரவையின் இரண்டாவது அமர்வில் முடிவெடுக்கப்படும். மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஒபாமா, “இந்தியாவை ஆதரிக்க மற்ற நாடுகள் முன்வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் சீனா தனித்து விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய பிரதமருக்கு கார் ஓட்டிய மெக்ஸிகோ அதிபர்!
மெக்ஸிகோஅதிபர் என்ரிக் பினா நீட்டோ, ‘எங்கள் நாட்டு வழக்கப்படி உணவு உண்ணுவோம்’ என மோடிக்கு இரவு விருந்தளித்தார். இதற்காக ரெஸ்டாரண்ட் செல்ல, நீட்டோவே தனது காரில் மோடியை அழைத்துச் சென்றார். அந்தக் காரை அதிபர் நீட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் பிரதமர் மோடி அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
